பொன்னமராவதியில் நடைபெற்ற ஆதார் சிறப்பு முகாமை, மேலும் 3 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய அஞ்சல்துறையின் புதுக்கோட்டை தெற்கு உபகோட்டம் சார்பில், பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகம் எதிரிலுள்ள சமுதாயக் கூடத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கியது.
இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்று புதிதாக ஆதார் அட்டை எடுத்தல், முகவரி மற்றும் பிறந்ததேதி திருத்தம் செய்தல், செல்லிடப்பேசி எண் திருத்தம் செய்தல் போன்ற சேவைகளைப் பெற்று பயன் அடைந்தனர். விழித்திரை மற்றும் கைரேகைப் பதிவு மூலம் இந்த சேவை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற முகாமின் நிறைவு நாளான சனிக்கிழமை அதிகமானோர் குவிந்தனர். பலர் மாலை வரை காத்திருந்து புகைப்படம் எடுத்தல், பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி, ஆதார் சிறப்பு முகாமை மேலும் 3 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பொன்னமராவதி பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.