அறந்தாங்கியில் வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. முன்னறிவிப்பின்றி அகற்றியதாகக் கண்டித்து அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியரகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அறந்தாங்கி நகரில் வெள்ளிக்கிழமை இரவு வரை ஆக்கிரமிப்பு அகற்றுவதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு வர்த்தக சங்கத் தலைவர் பா. வரதராஜன் தலைமையில் நிர்வாகிகள் பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வட்டாட்சியர் பா. சூரியபிரபு, மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் சி. கோகிலா நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியல் கைவிடப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்க மாநிலச் செயலர் எம்.என். ராமச்சந்திரன், அறந்தாங்கி சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர் அ. ராஜேந்திரன், செயலர் அ. அழகர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் ஆர். ராஜேந்திரன், ஏஐடியுசி நகரச் செயலர் அ. பெரியசாமி மற்றும் சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோர் முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதைக் கண்டித்தும், தள்ளுவண்டி உள்ளிட்ட சாலையோர வியாபாரிகளின் உடைமைகளை அப்புறப்படுத்தியோர் மீது நடவடிக்கை வேண்டும் எனக் கோரி சனிக்கிழமை மனு கொடுக்க வந்தனர். பின்னர் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயசித்ரகலாவிடம் மனு அளித்தனர்.