எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுகை மாவட்ட மீனவர்கள் 4 பேருக்கு சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த கோட்டைப்பட்டினத்தில் இருந்து ஹபீப் ரகுமான் என்பவருக்குச் சொந்தமான படகில் ஜெரோம், மெக்சன், கெம்ப்லஸ், ரவி ஆகிய 4 மீனவர்களும் நெடுந்தீவு பகுதியில் அண்மையில் (செப். 10) மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
இலங்கை வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நீதிபதி யூட்சன், மீனவர்களின் சிறைக் காவலை அக்-1 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 4 பேரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில்
அடைக்கப்பட்டனர்.