தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தக் கூடாது என வலியுறுத்தி புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் டி. சின்னையா தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். கண்ணையன், துணைச் செயலர் சி. பாலச்சந்திரன், துணைத் தலைவர் ஏ. அய்யாதுரை, பொருளாளர் கே. கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கே.ஆர். தர்மராஜன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். ஏஐடியுசி மாவட்டச் செயலர் வி. சிங்கமுத்து முடித்து வைத்துப் பேசினார். கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் க. சுரேஷ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
மத்திய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தக் கூடாது, கட்டடத் தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட அனைத்துச் சட்டங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்களைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.