புதுகை அருகே மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே திங்கள்கிழமை இரவு வயலுக்கு சென்ற இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
அன்னவாசல் அருகேயுள்ள புதூர் தாழம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி அடைக்கலம் மகன் முத்துக்குமார்(20). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு விவசாய வேலை செய்து வந்தார்.
திங்கள்கிழமை மாலை முதல் விடியவிடிய அன்னவாசல் பகுதிகளில் தொடர் மழை பெய்தது. அப்போது, அவரது வயலில் நடவுக்காக வைத்திருந்த நெல் விதைகளின் நிலை குறித்து அறிய முத்துக்குமார் மற்றும் அவரது உறவினர் பிரகாஷ் ஆகிய இருவரும் நள்ளிரவு வயலுக்குச் சென்று பார்த்தபோது, மின்னல் தாக்கி முத்துக்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
அருகே இருந்த பிரகாஷ் காயமின்றி தப்பினார். தகவலறிந்த அன்னவாசல் போலீஸார் சடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.