புதுக்கோட்டை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் (அக். 2) கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காந்தி பிறந்த தினமான அக். 2 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இக்கூட்டத்தில், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், குளங்கள், ஊரணிகள் போன்ற நீர்நிலைகளின் கொள்ளளவினை அதிகரிக்கும் பொருட்டு சீரமைத்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல் போன்ற பொருள்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
இதில், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.