அன்னவாசல் பகுதிகளில் அனுமதியின்றி மது விற்றவரைப் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
அன்னவாசல் பகுதிகளில் அனுமதியின்றி மது விற்கப்படுவதாக அன்னவாசல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அன்னவாசல் காவல் துணை ஆய்வாளர் வீரமணி தச்சம்பட்டி பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது தச்சம்பட்டி பெட்டிகடைக்கு பின்புறம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட தச்சம்பட்டியைச் சேர்ந்த எழுவன் மகன் செந்தில்குமார் (25) என்பவரைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
195 மதுபாட்டில்கள் பறிமுதல்: இதேபோல், புதுக்கோட்டை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சுகுணா தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சித்தன்னவாசல் ஊரணிகுளம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டிருந்த சித்தன்னவாசல் சமத்துவபுரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் பன்னீர்செல்வம் (32) என்பவரைக் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 195 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.