அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாலையோர வியாபாரிகள் சங்கம், சிஐடியு சங்கத் தொழிலாளர்கள் சார்பில் சனிக்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி பகுதியில் அண்மையில் நடைபெற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின்போது, சாலையோர வியாபாரிகள், அவர்களது பொருள்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு காரணமான காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் நகராட்சி ஆணையரைக் கண்டித்து இந்த தர்னா போராட்டம் நடைபெற்றது. மேலும், உணவகங்களில் பயன்படுத்திய இலைகளை எடுப்பதற்கு நகராட்சி நிர்வாகம் பல மடங்கு உயர்த்திய கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சட்டரீதியான கூலியை வழங்க வேண்டும், மாட்டு வண்டியில் உள்ளூரில் வீடு கட்டுபவர்களுக்கு மணல் கொண்டு செல்ல மாட்டு வண்டிகளுக்கு தனி குவாரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் க.தங்கராஜ் தலைமை வகித்தார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்
வி.மாரிமுத்து சிறப்புரையாற்றினார்.
போராட்டத்தில், கட்சியின் மாவட்டச்செயலாளர் எஸ்.கவிவர்மன், வட்டச் செயலாளர் தென்றல் கருப்பையா, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் எம்.ஜியாவுதீன் விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் வி.லெட்சுமணன், சாலையோர வியாபாரிகள், சிஐடியு கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.