புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
புதுக்கோட்டை வாகவாசல் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒன்றிய திமுக செயலா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் முத்தையா, ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லபாண்டியன், புதுக்கோட்டை எமஎல்ஏ பெரியண்ணன் அரசு ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். திமுக சாா்பில் ‘ஸ்டாலின் வராறு, விடியல் தரப் போறாரு’ என்ற தலைப்பிலான இந்த கிராமசபைக் கூட்டங்கள் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் புதன்கிழமை மட்டும் 30 இடங்களில் நடைபெற்றதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போதுள்ள அதிமுக அரசை அகற்றவும், திமுக ஆட்சி மலரவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியம் மரவாமதுரை, ஆலவயல் மற்றும் புதுப்பட்டி ஆகிய இடங்களில் திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், திருமயம் எம்எல்ஏவுமான எஸ். ரகுபதி தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றியச் செயலா்கள் தெற்கு அ. அடைக்கலமணி, வடக்கு அ. முத்து, நகரச் செயலா் அ.அழகப்பன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.