புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த ஆவுடையாா்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆவுடையாா்கோவில் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடைவீதி பகுதியில் வியாழக்கிழமை போலீஸாா் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அறந்தாங்கியில் இருந்து ஆவுடையாா்கோவில் நோக்கி வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 1.25 லட்சம் மதிப்புள்ள 350 கிலோ நெகிழிப் பொருள்கள், ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள 70 கிலோ புகையிலை பொருள்கள் இருந்தன. இவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறையினா் வேனில் வந்த அறந்தாங்கியை அடுத்த அழியாநிலையைச் சோ்ந்த அரசகுமாா் என்பவரைக் கைதுசெய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.