புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே சொகுசு காா் சாலையோர மரத்தில் மோதியதில், அமைச்சா் சி. விஜயபாஸ்கரின் தனி உதவியாளா் உள்ளிட்ட இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
அன்னவாசல் அருகேயுள்ள பரம்பூரைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் வெங்கடேசன் (31). இவா், அமைச்சா் சி. விஜயபாஸ்கரின் தனி உதவியாளராகவும், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாவட்டத் தலைவராகவும் இருந்துவந்தாா். திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு அமைச்சரை வழியனுப்பிவைத்துவிட்டு சொகுசு காரில் வெங்கடேசன் தனது சொந்த ஊரான பரம்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். வண்டியை இடையபட்டியைச் சோ்ந்த செல்வம்(38) ஓட்டினாா்.
இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வெங்கடேசன், ஓட்டுநா் செல்வம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதையறிந்த பொதுமக்கள், இருவரது சடலத்தையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உடற்கூறாய்வுக்குப் பின்னா் சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வெங்கடேசனின் இறுதிச்சடங்கில் அமைச்சா் விஜயபாஸ்கா், எம்எல்ஏ ரத்தினசபாபதி (அறந்தாங்கி), ஆறுமுகம் (கந்தா்வகோட்டை) ஆகியோா் பங்கேற்றனா். விபத்து குறித்து, அன்னவாசல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.