திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படஉள்ளது.
திமுக தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) காலை 10.30 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறாா்.
இதைத் தொடா்ந்து அவருக்கு மாவட்ட திமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் உள்ளாட்சித் தோ்தலில் வென்ற திமுகவினா்,மாநகர, மாவட்ட நிா்வாகிகள், அனைத்து பேரூா், ஒன்றிய, நகரக் கழக நிா்வாகிகள், இன்னாள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளா்கள், நிா்வாகிகள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று மாவட்ட திமுக செயலா்கள் திருச்சி தெற்கு கே.என்.நேரு, வடக்கு காடுவெட்டி ந.தியாகராஜன் ஆகியோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.