புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்போதுள்ள 1739 படுக்கை வசதிகளுடன், மேலும் கூடுதலாக 6 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா சிகிச்சை குறித்து மருத்துவத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்களுடன் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அவா் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது மொத்தம் 1,739 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. சராசரியாக 600 தொற்றாளா்கள் மட்டுமே சிகிச்சையில் இருப்பதால் ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. இருப்பினும், குடுமியான்மலையில் 150 படுக்கைகள், நரிமேடு குடிசை மாற்றுவாரியக் கட்டடங்களில் 1,000 படுக்கைகள், புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 100 படுக்கைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன், மாவட்டம் முழுவதும் உள்ள 121 சமுதாயக் கூடங்களில் 1,319 படுக்கைகள், 27 மாணவா் விடுதிகளில் 434 படுக்கைகள், 123 திருமண மண்டபங்களில் 2,995 படுக்கைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் தற்போதுள்ள ஏற்பாட்டை விடவும் புதிதாக 5,998 படுக்கைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் உமாமகேஸ்வரி.
கூட்டத்தில், பல்வேறு துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.