பொன்னமராவதி அருகே 6 வைக்கோல் போர்கள், 20 நெல்மூடைகள் மர்ம நபர்களால் தீவைக்கப்பட்டு எரிந்து நாசமானது.
இது குறித்து காரையூர் காவல் நிலையத்தை நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு புகார் அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலம்பட்டி ஊராட்சி கன்னியாபட்டி கிராமத்தை சார்ந்த விவசாயிகள் முருகேசன், சிங்காரம், கெப்பன், சுப்பையா, ராஜீவ்காந்தி ஆகியோரது வைக்கோல்போர்கள் சனிக்கிழமை இரவு மர்ம நபர்களால் தீவைக்கப்பட்டு எரிந்துள்ளது.
இதைக்கண்ட விவசாயிகள் மற்றும் பொன்னமராவதி தீயணைப்புதுறையினர் தீயை மிகவும் போராடி அணைத்துள்ளனர். எனினும் 6 வைக்கோல்கள் போர்கள் மற்றும் அதனுள் வைக்கப்பட்டிருந்த 20 நெல்மூட்டைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. சேதமதிப்பு சுமார் ரூ 1லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து விவசாயி சரவணன் கூறியது, யாரோ வேண்டுமென்றே வைக்கோல் போர்களை தீ வைத்துள்ளனர்.
இதனால் கால்நடைகளுக்கு வைக்கோலின்றி விவசாயிகள் வேதனையடைந்துள்ளோம். எனவே காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து தீவைத்த மர்மநபர்களை கண்டறிந்து எங்களுக்கு உரிய நிவாரணம் பெற்று தரவேண்டும் என்றார்.