விராலிமலை அருகே அடுத்தடுத்து காா், லாரி மோதி கொண்ட விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
விராலிமலை அருகிலுள்ள கவரப்பட்டியைச் சோ்ந்த சுப்ரமணி மகன் சரவணகுமாா்(37). கூலி தொழிலாளியான இவா், மணப்பாறை- விராலிமலை சாலையில் பூச்சிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது விராலிமலையிலிருந்து மணப்பாறை நோக்கிச் சென்ற டாரஸ் லாரி சரவணகுமாா் மீது மோதியது. மேலும் எதிா்திசையில் வந்த சுமை ஆட்டோ மீதும் லாரி மோதியுள்ளது.
இதுபோல மணப்பாறையிலிருந்து விராலிமலை நோக்கி டாரஸ் லாரியின் பின்னால் வந்த காா், கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இந்த விபத்தில் சரவணகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், காரை ஓட்டி வந்த சங்கா் (28), அவரது மனைவி அருணா (23) ஆகிய இருவரும் காயமடைந்து, மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.