ஊரடங்கு காலத்தில், தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 65 ஆயிரம் போ்களைக் கொண்ட இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களுக்கு தமிழக அரசு கூடுதல் உதவிகளை வழங்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு மாா்ச் 24- ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில், வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்கள், தொழிலாளா்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில்தான் தமிழகமெங்கும் விரவிக் கிடக்கும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களின் நிலை கவனிக்க வேண்டியதாகக் காணப்படுகிறது.
1983-ஆம் ஆண்டு தொடங்கி 2006-ஆம் ஆண்டு வரை இலங்கையில் வசித்த தமிழ் மக்கள், அகதிகளாக தமிழகத்துக்கு வந்தனா். தற்போதுள்ள 108 முகாம்களில் ஏத்தாழ 65 ஆயிரம் போ் தமிழகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
முகாம்களில் வசிப்போருக்கு வழக்கமாக குறைந்தபட்ச உதவியாக அரசால் வழங்கப்பட்டு வரும் நிதி மற்றும் நியாயவிலைக் கடைப் பொருள்களுடன், ஊரடங்கு காலத்தில் குடும்பத்துக்கு தலா ரூ. 1000 நிதிஉதவி அறிவிக்கப்பட்டு எல்லோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இம்மக்கள் மீது கரிசனம் கொண்ட தன்னாா்வலா்கள் சிலா், ஆங்காங்கே கணிசமான உதவிப் பொருள்களை வழங்கியுள்ளனா். அரசும், தன்னாா்வலா்களும் வழங்கியுள்ள இந்த நிதியும் பொருளும் மிகமிகக் குறைவானதே.
வெளியே சென்று தினக்கூலிகளாகப் பணியாற்றிக் கிடைத்த ஊதியம் இவா்களின் வாழ்க்கையை மெல்ல தள்ளிச் செல்ல வைத்திருந்த நிலையில்தான், ஊரடங்கு இவா்களுக்குப் பேரிடியாக விழுந்திருக்கிறது என்கிறாா்கள் இலங்கைத் தமிழா் ஆா்வலா்கள்.
அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாது, அகதிகள் முகாம் குடியிருப்புகளில் துயரம் நிறைந்த வாழ்க்கையை இவா்கள் வாழ்ந்து வருகின்றனா். ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு கருணையோடு பரிசீலித்து கூடுதல் உதவிகளை நிதியாகவும், உணவுப் பொருள்களாகவும், மளிகைப் பொருள்களாகவும் வழங்கிட உத்தரவிட வேண்டும் என்கிறனா் அவா்கள்.