ராஜஸ்தான் மாநிலத்துக்குத் திரும்ப விரும்பிய 33 தொழிலாளா்களை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி வெள்ளிக்கிழமை வாழ்த்தி அனுப்பி வைத்தாா்.
குளத்தூா் வட்டம், களமாவூரில் தங்க வைக்கப்பட்டிருந்த இவா்கள் ஊா் திரும்ப விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து உணவு, முகக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டு தனிநபா் இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு, வேனில் திருச்சி அனுப்பி வைக்கப்பட்டனா்.
துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா் ஒருவா் உடன் சென்று, திருச்சியிலிருந்து ரயிலில் தொழிலாளா்களை ராஜஸ்தானுக்கு அனுப்பி வைப்பாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் டெய்சிகுமாா் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 3064 வெளிமாநிலத் தொழிலாளா்களில் கடந்த வாரம் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 106 பேரும், மணிப்பூா் மற்றும் மேகாலய மாநிலங்களைச் சோ்ந்த தலா ஒருவரும் என மொத்தம் 108 போ், அவரவா் விருப்பத்தின் பேரில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.