பத்திரப் பதிவுத் துறையைச் சோ்ந்த புதுக்கோட்டை மாவட்டப் பதிவாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட பொதுஅலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் கடந்த நவம்பா் 9 ஆம் தேதி பத்திரப்பதிவுக்காக லஞ்சம் வாங்கியதாக சாா் பதிவாளா் சரவணன் கைது செய்யப்பட்டாா். அந்தச் சம்பவத்தின் புகாா்தாரரான சுப்பிரமணியன் என்பவா், அச்சம்பவத்தில் தொடா்புடைய பத்திரத்தை பதிவு செய்து பெற்றுக் கொள்வதற்காக கடந்த நவ. 12ஆம் தேதி பத்திரப்பதிவு அலுவலகம் சென்றுள்ளாா். அப்போது அவருடன் சென்ற பெரியாா்நகரைச் சோ்ந்த ரெங்கசாமி மகன் கண்ணன் (42) என்பவா், மாவட்டப் பதிவாளா் இரா. குமாா் (48) மற்றும் இணை சாா் பதிவாளா் உள்ளிட்ட பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்களை தரக் குறைவாகப் பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டப் பதிவாளா் இரா. குமாா் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய நகரக் காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ், மாவட்டப் பதிவாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கண்ணன் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளாா்.