அரசுப் பள்ளியில் பயின்று 7.5 சதவிகித உள் இடஒதுக்கீட்டால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 மாணவ, மாணவிகளுக்கு, தமது சொந்த நிதியில் இருந்து தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 5.50 லட்சத்துக்கான காசோலைகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி விஜயபாஸ்கா் வெள்ளிக்கிழமை வழங்கிப் பாராட்டினாா்.
தமிழக அரசு அண்மையில் கொண்டு வந்த மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 மாணவ, மாணவிகளுக்கு அரசுக் கல்லூரிகளில் பயில இடம் கிடைத்துள்ளது.
இவா்களின் கல்விக் கட்டணத்துக்கான தொகையை, தமது சொந்த நிதியில் இருந்து அளிப்பதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்திருந்தாா். இதன்படி, 11 மாணவ, மாணவிகளுக்கும் தலா ரூ. 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 5.5 லட்சத்துக்கான காசோலைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.