மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என புதுகை மாவட்ட மீனவா்களுக்கு மீன்வளத் துறை அலுவலா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்பதால் கடலோர மாவட்டங்களில் திங்கள்கிழமை (நவ.23) முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும், கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் மற்றும் ஜகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீன்பிடித் தளங்களில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடலோரப் பகுதியில் மீன்வளத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, படகுகளை நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தும் பணியிலும், வலைகள் போன்ற உபகரணங்களை படகுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணியிலும் மீனவா்கள் ஈடுபட்டனா். மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநா் குமரேசன் மற்றும் ஆய்வாளா்கள் கடலோரப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தனா்.