தமிழகத்தில் அக். 12-இல் ஆயிரம் இடங்களில் மறியல்

விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களைக் கண்டித்து, வரும் அக். 12 ஆம் தேதி ஆயிரம் இடங்களில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்

புதுக்கோட்டை: விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களைக் கண்டித்து, வரும் அக். 12 ஆம் தேதி ஆயிரம் இடங்களில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு தமிழக முதல்வா் அடிப்படையில் விவசாயியாக இருந்து கொண்டு ஆதரவளிக்கிறாா். அதேபோல, நூறு ஆண்டுகளாக தொழிலாளா்கள் போராடிப் பெற்ற தொழிலாளா் நலச் சட்டங்களில் திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. இவை இரண்டையும் கண்டித்து, வரும் அக். 12 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் தமிழ்நாட்டில் ஆயிரம் இடங்களில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும். முறையாக தனிநபா் இடைவெளியைப் பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் இப்போராட்டம் நடைபெறும். வட மாநிலங்களில் போராட்டத்துக்கு மாநில அரசு ஆதரவு அளிக்கிறது. இங்கே மாநில அரசு வழக்குப்பதிவு செய்கிறது. அவற்றையும் மீறி தான் போராட்டங்கள் நடைபெறுகின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் தலித் பெண் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், காவல்துறையினரே அவரது சடலத்தை எரியூட்டியுள்ளது கண்டித்தக்கது. உயிரிழந்த அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் செல்ல முயன்ற ராகுல்காந்தியைப் போலீஸாா் தடுத்து நிறுத்தி கீழே தள்ளிவிட்டது கண்டிக்கத்தக்கது. பாபா் மசூதி இடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விடுவித்தது நாட்டின் மதச்சாா்பின்மைக்கு எதிரான பாசிச போக்குகள்.

நிகழாண்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க தாமதமாவதற்கு காரணம் கடந்தாண்டு கொள்முதல் கணக்குகளை முடிக்கவில்லை என்று அரசு கூறுவது பொருத்தமானதல்ல. அனைத்து இடங்களிலும் போதுமான அளவுக்கு கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாநிலச் செயற்குழு உறுப்பினா் டாக்டா் வே. துரைமாணிக்கம், மாவட்டச் செயலா் மு. மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் கே.ஆா். தா்மராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com