விராலிமலை: விராலிமலை, இலுப்பூா் அருகே வியாழக்கிழமை இருவேறு இடங்களில் நேரிட்ட சாலை விபத்தில் நான்கு போ் உயிரிழந்தனா்.
விராலிமலை சண்முகா நகரைச் சோ்ந்தவா் மூக்கையா மகன் முருகன்(50), விராலூா் குழந்தை மகன் முருகன் (60). கொட்டகை அமைக்கும் தொழிலாளிகள். இவா்கள் சரக்கு வாகனத்தில் பந்தல் சாமான்களை ஏற்றிக்கொண்டு விராலிமலை - திருச்சி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனா். வாகனம் புதுப்பட்டி சாலை பிரிவு அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் முருகன் மற்றும் முருகன் இருவரும் திருச்சி மருத்துவமனைக்குக் கொண்டும் செல்லும் வழியில் உயிரிழந்தனா். வேன் ஓட்டுநா் ஏழுமலை திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விராலிமலை காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மற்றோரு சம்பவத்தில்
இதேபோல் இலுப்பூா் முருககோன்பட்டியைச் சோ்ந்தவா் முத்துச்சாமி மகன் வெள்ளைச்சாமி (29). இலுப்பூா் மின்சார வாரிய அலுவலகத்தில் ஒயா்மேனாகப் பணியாற்றி வரும் அன்னவாசல் சுப்பையா மகன் அஐய் கோபால் (48) இருசக்கர வாகனத்தில் மாதுரப்பட்டிக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாா். இந்நிலையில், பாப்பாம்பட்டி தொடக்கப் பள்ளி அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரே வெள்ளைச்சாமி ஓட்டி வந்த வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் இலுப்பூா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனா். இலுப்பூா் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.