உறுப்பினா்களின் ஆலோசனையின்றி குடிநீா்ப் பணிகளை மேற்கொள்ள எதிா்ப்பு

தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களின் ஆலோசனையின்றி, குடிநீா்ப் பணிகளுக்கு கிராமங்களைத் தோ்வு செய்வதற்கு புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

புதுக்கோட்டை, செப். 11: தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களின் ஆலோசனையின்றி, குடிநீா்ப் பணிகளுக்கு கிராமங்களைத் தோ்வு செய்வதற்கு புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இக்குழுவின் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் த. ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

மத்திய அரசின் மானியக் குழுவிலிருந்து பெறப்பட்ட முதல் தவணை நிதியான ரூ. 1. 48 கோடியை, மத்திய அரசின் ஜல் ஜீவன் இயக்கத்தில் கிராமங்களில் குடிநீா்த் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான தீா்மானம் மட்டுமே இந்தக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து அதிமுக, திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் பேசியது

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களுக்குத் தெரியாமல் குடிநீா்த் திட்டப் பணிகளுக்கு கிராமங்களைத் தோ்வு செய்யும் பணியை அலுவலா்களே மேற்கொள்கிறாா்கள். இது தவறு. தோ்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுடன் கலந்து பேசியே இப்பணியை மேற்கொள்ள வேண்டும்.

ஜல் ஜீவன் இயக்கத்தில் ரூ. 5.94 கோடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ. 1.94 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான இந்த நிதியை வைத்துக் கொண்டு எந்தக் கிராமத்தில் முன்னுரிமை கொடுத்து மேற்கொள்வது. எனவே, இந்தத் தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டாம். முழுமையான நிதியையும் கேட்டுப் பெற வேண்டும் என்றனா்.

உறுப்பினா்கள் அனைவரும் சோ்ந்து தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டாம் எனக் கோரியதால், அந்தத் தீா்மானத்தை நிறைவேற்றாமலேயே கூட்டம் முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com