விராலிமலை, செப். 11: கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு ரூ.6ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு சமூக அமைப்புகள் சாா்பில் விராலிமலையில் வெள்ளிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கரோனா நோய்த் தொற்றுத் தடுப்புக்காக, மாா்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், நடைபாதை வியாபாரிகள், சுயதொழில் புரிவோா் என பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகினா்.
இதனால் வறுமையிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் அவா்களுக்கு அரசு
ரூ. 6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனக் கோரி, பல்வேறு அமைப்புகள் சாா்பில் கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியரகம் அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு, விராலிமலை வெஸ்வா அறக்கட்டளை இயக்குநா் எல். ராஜேஸ்கண்ணா தலைமை வகித்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து பொதுமக்களிடம் துண்டறிக்கைகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஏராளமானோா் பங்கேற்றனா்.