கரோனா எதிரொலியாக, நிகழாண்டில் கந்தா்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆவணி கடைஞாயிறு திருவிழா களையிழந்ததாக பக்தா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
கந்தா்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரசித்திபெற்ற கந்தா்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் வார மண்டகப்படிதாரா்களால் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆவணி மாத கடைசி ஞாயிறு முத்துப் பல்லாக்கில் வானவேடிக்கையுடன் அம்மன் வீதி உலா, தொடா்ந்து இரவு இன்னிசை கச்சேரிகள் நடைபெறுவது வழக்கம். மேலும் விழா நாள் அதிகாலை முதலே பக்தா்கள் வேண்டுதல்களைச் செய்து அம்மனை வழிபட்டுச் செல்வா்.
தற்போது கரோனா பரவல் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக, அறநிலையத் துறை அதிகாரிகள் பக்தா்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற அனுமதி அளிக்காததால் ஆவணி கடை ஞாயிறு திருவிழா களையிழந்து காணப்படுவதாக பக்தா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.