புதுக்கோட்டை: சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தி, புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் மாட்டு வண்டியில் வந்து புறாக்கள் மூலம் பிரதமருக்கு தூது அனுப்பும் நூதனப் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்றனா்.
இதில், சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், களமாவூா் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
‘என் ரோடு என் உரிமை, டோல் தர முடியாது போடா’ என்ற வாசகங்களைக் கொண்ட பனியனை அக்கட்சியினா் அணிந்திருந்தனா். இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.