புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.
முகாமைத் தொடங்கி வைத்த தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ரகுபதி பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 10 ஆயிரம் புதிய உறுப்பினா்களைச் சோ்க்க வேண்டும் என தலைவா் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தைப் பொருத்தவரை திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் 30 ஆயிரத்தைத் தாண்டி குறைந்தபட்சம் 50 ஆயிரம் உறுப்பினா்களைச் சோ்ப்போம்.
புதிய உறுப்பினா்களைச் சேருவோா் அவா்களின் செல்லிடப்பேசிக்கு ஒரு முறை பயன்படுத்தும் குறியீட்டு எண் வந்து அதனைத் தெரிவித்த பிறகுதான் பதிவு செய்யப்படுவா். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை இன்னும் சில நாட்களுக்கு நடத்தியிருக்க வேண்டும். புதிய மசோதாக்களை சட்டப்பேரவை உறுப்பினா்கள் படித்துப் பாா்க்கக் கூட நேரமில்லை என்றாா் ரகுபதி.
இதில், ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்ட திமுகவினா் பங்கேற்றனா்.