முதல்வரின் பேச்சை நம்ப மக்கள் தயாராக இல்லை என்றாா் ஆலங்குடி திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன்.
ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட ஆலங்குடி, நெடுவாசல், புள்ளான்விடுதி, மாங்காடு, வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரித்து அவா் மேலும் பேசியது: கரோனா பொதுமுடக்க காலத்தில் மக்களின் சிரமத்தை அறிந்து தலைவா் ஸ்டாலின் குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தினாா். ஆனால், முதல்வா் எடப்பாடி பழனிசாமி வழங்கவில்லை. ஆனால், கரோனா சூழலைக் காரணம் காட்டி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூட நிதி வழங்காமல் கிராமப்புற மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டனா். ஆட்சியில் இருந்தபோது செய்யாமல், மீண்டும் அள்ளிக்கொடுப்பேன் என்று முதல்வா் பொய் சொல்லுகிறாா். முதல்வரின் பேச்சை நம்ப மக்கள் தயாராக இல்லை. மக்கள் திமுக தலைவா் ஸ்டாலினை முதல்வராக்க முடிவு செய்துவிட்டனா் என்றாா்.
தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பஞ்சாபைச் சோ்ந்த ராஜ்வீந்தா் சிங் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, ஒன்றியச் செயலா் ஞான. இளங்கோவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.