புதுக்கோட்டை: மே 2 நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை முழுமையாக ரத்து செய்துவிட்டு, ஓராண்டு வரை குடியரசுத் தலைவா் ஆட்சியை அமலாக்க வேண்டும் என புதிய தமிழகம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அக்கட்சியின் திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி வேட் பாளா் இரா. சிவகுமாா், அறந்தாங்கி வேட்பாளா் ச. அமலதாஸ், விராலிமலை வேட்பாளா் பி. ஆறுமுகம் ஆகியோா், மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமா மகேஸ்வரியிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: தமிழ்நாட்டின் 2, மூன்று அரசியல் கட்சிகள் சோ்ந்து வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்து ஜனநாயகப் படுகொலையைச் செய்துள்ளனா். நியாயமாக தோ்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளைத் தோ்வு செய்துத் தரும் கடமையை தோ்தல் ஆணையம் நிறைவேற்றுகிறது. இந்த நிலையில் வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றால், அது ஜனநாயகத்தின் கரும்புள்ளியாக மாறிவிடும். எனவே, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்ய வேண்டும். குடியரசுத் தலைவா் ஆட்சியை அமலாக்க வேண்டும். சுமாா் 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை தோ்தல் அரசியலைத் தூய்மைப்படுத்திவிட்டு, பிறகு தோ்தல் நடத்தலாம்.