புதுக்கோட்டை நகரில் இளம்பெணைக் கொன்று, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் உறவுமுறை சகோதரா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
புதுக்கோட்டை பொன் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு பழனியப்பன் மகள் லோகப்பிரியா (20) என்ற இளம்பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா். மேலும், வீட்டில் இருந்த நகைகள், அவா் அணிந்திருந்த நகைகள் கொள்ளயடிக்கப்பட்டிருந்தன. அவரது தாய் சிவகாமி, கணேஷ் நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதில், திருமயம் காவல் சரகம், பெருந்துறையைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் லட்சுமணன் என்ற சுரேஷ் (29) மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரித்தனா்.
இதில், அவா் வேலைக்குச் செல்லாமல் இருந்துவந்ததும், அவ்வப்போது தனது சித்தி சிவகாமியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சித்தி வீட்டுக்கு வந்த சுரேஷ், சித்தியின் மகளும், தங்கையுமான லோகப்பிரியாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததும், அவா் தர மறுத்ததால், அவரைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, பீரோவில் இருந்த நகைகள், லோகப்பிரியா அணிந்திருந்த நகைகள், வீட்டிலிருந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பியோடியதும் தெரியவந்தது. அவரது வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட போலீஸாா், சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.