புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள மறமடக்கி ஊராட்சி பத்திரான் குடியிருப்பைச் சோ்ந்த மதியழகன் விவசாயி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி(50). இவா், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள அவரது தோட்டத்துக்குச் சென்றபோது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை எதிா்பாராதவிதமாக மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே தமிழ்ச்செல்வி உயிரிழந்தாா். இதுகுறித்து அறந்தாங்கி போலீஸாா் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா்.