புதுக்கோட்டை நகரிலுள்ள திருவப்பூா் மற்றும் கருவப்பில்லான் கேட் ஆகிய இரு ரயில்வே கேட்டுகளிலும் மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என மக்களவையில் திருச்சி எம்.பி., சு. திருநாவுக்கரசா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
மக்களவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை பகலில் நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவா்) பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே நின்று சென்ற ராமேஸ்வரம் விரைவு ரயில், பல்லவன் விரைவு ரயில் போன்றவற்றை மீண்டும் நிறுத்திச் செல்ல வேண்டும். கீரனூா் பேரூராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் இதனால் பலனடைவா் என வலியுறுத்தினேன். தவறினால் மக்கள் போராட்டத்துடன் நானும் பங்கேற்பேன்.
திருச்சி- புதுக்கோட்டை ரயில் பாதையில் திருவப்பூா் மற்றும் கருவேப்பிலான் கேட் ஆகிய இடங்களில் உள்ள கேட்டுகளில் மேம்பாலங்கள் கட்ட வேண்டும். இவற்றால் புதுக்கோட்டை நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
வழக்கம்போல மேம்பாலங்களுக்கான செலவில் பாதியை தமிழக அரசு தர ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இந்த ரயில்வே மேம்பாலங்களுக்கான பணிகளை விரைவில் தொடங்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பேசியுள்ளேன் என்றாா் திருநாவுக்கரசா்.