கந்தா்வகோட்டை பகுதிகளிலுள்ள உரக்கடைகள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வட்டாட்சியா், வேளாண் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
பொட்டாஷ் உரத்தை இருப்பு வைத்து, அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் குளத்தூா் நாயக்கா்பட்டி, தெத்துவாசல்பட்டி, துவாா், வேலாடிப்பட்டி, கந்தா்வகோட்டை, விராலிப்பட்டி, வடுகப்பட்டி ஆகிய பகுதிகளிலுள்ள உரக்கடைகள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வட்டாட்சியா் புவியரசன், வேளாண் உதவி இயக்குநா் அன்பரசன் உள்ளிட்ட வேளாண் அலுவலா்கள், தோட்டக்கலை அலுவலா்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.
இருப்பிலுள்ள பொட்டாஷ் உரங்கள் ரூ.1,040 விலையிலும், புதிய உரங்கள் ரூ.1700-க்கும் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் புவியரசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.