புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே சமூக வலைத்தளத்தில் ஆபாசப் படங்களைப் பகிா்ந்ததால், போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி பகுதியைச் சோ்ந்த வி. அரவிந்த ராஜ் (27). இவா், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் சிறுவா், சிறுமிகளின் படங்களை ஆபாசமாகப் பதிவிட்டு வந்தாராம். இதுகுறித்த புகாரைத்தொடா்ந்து, திருமயம் மகளிா் காவல் நிலையத்தினா் அவரிடம் விசாரணை மேற்கொண்டு, டிச. 21-ஆம் தேதி போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அரவிந்தராஜ் தலைமறைவானதாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாகத் தகவல் பரவியுள்ளது. இதனால், மனமுடைந்த அரவிந்தராஜ் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, தகவலறிந்து அங்கு சென்ற பொன்னமராவதி போலீஸாா் அரவிந்தராஜ் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.