கந்தா்வகோட்டை அருகேயுள்ள புதுநகரில் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கும் பழைய கால்நடை மருத்துவமனை கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட அரசு கால்நடை மருத்துவமனை தற்போது சிதிலமடைந்து, பக்கவாட்டு சுவா்கள் உடைந்து ஆபத்தான நிலையில் பயன்பாடின்றி உள்ளது. இந்தப் பழைய கட்டடத்துக்கு பின்புறம் புதிதாக கட்டப்பட்ட அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இடியும் நிலையில் உள்ள இந்தப் பழைய கால்நடை மருத்துவமனைக் கட்டடம் வழியாக தினந்தோறும் சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் கால்நடைகளைக் கொண்டு சென்று வருகின்றனா். பெருவிபத்து ஏற்படும் முன் இந்தக் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், கிராம பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை வைக்கின்றனா்.