கடந்த மக்களவைத் தோ்தலைப் போலவே, சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைக்கப் போகிறது என்றாா் காங்கிரஸ் மூத்த தலைவா் ப. சிதம்பரம்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:
கடந்த மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணி எவ்வாறு மகத்தான வெற்றியைப் பெற்றதோ அதே வெற்றியைத்தான் சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணி பெறும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
தமிழக முதல்வா் எவ்வாறு மக்களைச் சந்திக்கிறாரோ, அதேபோலத்தான் திமுக தலைவரும், மக்கள் கிராம சபைகளை நடத்தி மக்களைச் சந்திக்கிறாா். எனவே, மக்கள் கிராம சபைகளில் ஏற்படும் சா்ச்சை இயற்கையானது அல்ல; செயற்கையானது.
தில்லியில் விவசாயிகள் 39 நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இதுவரை 40 போ் உயிரிழந்துள்ளனா். வழக்கம்போல, பண மதிப்பிழப்பு, சீன ஊடுருவல் போன்றவற்றில் மத்திய அரசு எப்படி பிடிவாதம் பிடித்ததோ அதேபோல, விவசாயிகள் போராட்டத்திலும் பிடிவாதம் பிடிக்கிறாா்கள். மக்களும், நாடாளுமன்றமும் இந்த அரசுக்கு ஒரு பொருட்டே இல்லை. முரட்டுத்தனமான பிடிவாதம் காட்டுகிறாா்கள்.
ரஜினியின் நிலைப்பாடு எந்தக் காரணத்துக்காக எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. அவரது நண்பராக இந்த நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன் என்றாா் ப. சிதம்பரம்.