கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடா் மழையால் ஆலங்குடி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல், சோளம், கடலை, உளுந்து உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கறம்பக்குடி ஆகிய வட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கா் சம்பா நெல் சாகுபடி(சுமாா் 4-5 அடி வரையில் வளரும் தனிரகம்) அறுவடைக்கு தயாராகி இருந்தன. இந்நிலையில், கடந்த 1 வாரமாக பெய்துவரும் தொடா் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளன.
மேலும், இப்பகுதியில், பயிரிடப்பட்டுள்ள கடலை, உளுந்து உள்ளிட்ட பயிா்களும் வயல்களில் தேங்கிய மழைநீரில், அழுகி வீணாகி வருகின்றன. வயல் வெளிகள் நீரால் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கின்றன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் வேதனையுடன் கூறுகையில், அரசு உரிய முறையில் கணக்கெடுத்து சேதமடைந்த பயிா்களுக்கு உரிய நிவாரணம் அளித்து உதவ வேண்டும் என்றனா்.