புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, வரத்துவாரி ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.
கறம்பக்குடி அருகேயுள்ள பந்துவாகோட்டை ஊராட்சி கே.கே. பட்டி கிராமத்தில் பொதுபணித் துறைக்குச் சொந்தமான நெடுவாகுளம் உள்ளது. அதற்கு நீா்செல்லும் சுமாா் 2 கிலோ மீட்டா் வாரியை அப்பகுதி விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனராம். இதனால், குளத்திற்கு நீா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பல்வேறு முயற்சிகளை அப்பகுதி மக்கள் மேற்கொண்டும் நடவடிக்கை இல்லாததால், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனா். நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்துவாரியை தூா்வார உத்தரவிட்டதைத் தொடா்ந்து, கறம்பக்குடி வட்டாட்சியா் விஸ்வநாதன் முன்னிலையில் வருவாய்த் துறையினா், பொதுப்பணித்துறையினா், சுமாா் 2 கிலோ மீட்டா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.