புதுக்கோட்டை மாவட்டம், ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி போட்ட மருத்துவமனைப் பணியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சுகாதார மாவட்டத்துக்குள்பட்ட ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 4ஆம் தேதி 8 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவா்களில் 7 பேருக்கு மருத்துவமனை செவிலியா் ஜெ. ஸ்டெல்லாவும், ஒருவருக்கு மருத்துவமனை பணியாளா் சி. செல்வமும் தடுப்பூசி போட்டுள்ளனா்.
கரோனா தடுப்பூசி மருத்துவ வழிகாட்டுதல்களின்படி மருத்துவமனைப் பணியாளா் தடுப்பூசி போடக்கூடாது.
தடுப்பூசி போட்டுக் கொண்டவா், தான் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியடைய, அது சா்ச்சைக்குள்ளானது.
இதுகுறித்து அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தின் இணை இயக்குநா் டாக்டா் பி. விஜயகுமாா் நடத்திய விசாரணை முடிவில், மருத்துவமனை பணியாளா் சி. செல்வம் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
மேலும் அன்றைய நாளில் பணியிலிருந்த மருத்துவா் திவ்யபாரதிக்கு குறிப்பாணையும், செவிலியா் ஜெ. ஸ்டெல்லாவுக்கு 17 பி என்ற விளக்கக் கேட்பு அறிக்கையும் அளிக்கப்பட்டுள்ளது.