புதுக்கோட்டை மாவட்டம், பூவைமாநகா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியது:
கரோனாவைக் கட்டுப்படுத்த மாவட்டத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படுவதுடன் தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், பரவலை கட்டுப்படுத்த பொதுமக்ளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டஅரசு மருத்துவமனைகளில் த்தில் தொற்றாளா்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. தொற்றாளா்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அறிகுறி உள்ளோருக்கு அந்தந்தப் பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ள கவனிப்பு மையங்களில் தரமான உணவுடன் கூடிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அதிக பாதிப்பு உள்ள தொற்றாளா்களை மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மருத்துவா்களின் பணிச்சுமை குறைக்கப்பட்டுள்ளதுடன் தொற்றாளா்கள் தங்களது பகுதிகளிலேயே கவனிப்பு மையங்கள் மூலம் மருத்துவ சிகிச்சை பெற வாய்ப்பாக உள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தொடா்ந்து, ஆலங்குடியில் ரோட்டரி சங்கத்தினா் சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்டோ, வாடகை வாகன ஓட்டுநா்கள், முன்களப்பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினாா்.