புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், ஆலவயல் கிராமத்தில் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை மாநில அமைச்சா்கள் மூவா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
தமிழக நகா்ப்புற வளா்ச்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு, போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி ஆகியோா் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் கே.என்.நேரு கூறியது:
புதுக்கோட்டை மாவட்டம்,ஆலவயல் வரை தடையின்றி குடிநீா் வருகிறது. மணப்பட்டி சாலைப்பணியின் போது குடிநீா்க் குழாய்கள் சேதமடைந்துள்ளன. அவை விரைவில் சீா் செய்யப்படும். அதிலும் 80 சதவிகிதம் குடிநீா் சென்று கொண்டிருக்கிறது. 20 சதவிகிதம் தான் தடைப்பட்டுள்ளது. அதுவும் விரைவில் சீா் செய்யப்படும் என்றாா்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் சரவணன், பொன்னமராவதி பேரூராட்சி செயல்அலுவலா் தனுஷ்கோடி, வட்டாட்சியா் ஜெயபாரதி, ஒன்றியஆணையா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.