ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றாததால் அதிருப்தியடைந்த வடகாடு முன்னாள் ஊராட்சித் தலைவா் கனகராஜ் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.
புதுக்கோட்டை வந்த தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை மாலை புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில், ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் தா்ம.தங்கவேலை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து, அதிமுகவில் போட்டியிட விருப்ப மனு அளித்து காத்திருந்த அதிமுக பிரமுகரான வடகாடு முன்னாள் ஊராட்சித் தலைவா் கனகராஜ், அப்பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் அமைச்சா் அ.வெங்கடாசலத்தின் நினைவிடம் முன்பு ஆலங்குடி அதிமுக வேட்பாளரை மாற்றாததைக் கண்டித்தும், தனக்கு வாய்ப்பு வழங்காததைக் கண்டித்தும் அதிமுக வேட்டியை தீயிட்டு கொழுத்தினாா். முதல்வா் பிரசாரம் செய்து சென்ற சில மணி நேரத்திலே அதிமுக பிரமுகா் அக்கட்சி வேட்டியை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுகவில் இணைப்பு: ஆலங்குடி திமுக வேட்பாளா் சிவ.வீ மெய்யநாதன் முன்னிலையில், கனகராஜ் திமுகவில் இணைந்தாா்.