கந்தா்வகோட்டையில் உள்ள தனியாா் வங்கியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது.
கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் அருகே தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியை சனிக்கிழமை மாலை பணி முடிந்து வங்கி ஊழியா்கள் வழக்கம்போல் பூட்டிச் சென்றனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வங்கியின் அலாரம் ஒலித்ததையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் வந்ததால் கொள்ளையன் தப்பியோடினான். போலீஸாா் விசாரணையில், வங்கியின் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையன், லாக்கரை உடைக்க முற்பட்டபோது அலாரம் ஒலித்ததும் பொதுமக்கள் வருவதைக் கண்ட கொள்ளையன் தப்பியோடியது தெரியவந்தது. கொள்ளையன் முகமூடி, கையுறை அணிந்திருந்தது கேமரா பதிவில் தெரியவந்துள்ளது.