புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை மழையைப் பயன்படுத்தி உழவு மேற்கொண்டு விவசாயிகள் பயனடையலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இராம. சிவகுமாா் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோடை உழவு செய்வதால் மேல் மண் துகள்களாகிறது. எனவே, நிலத்தில் நீா் இறங்கும் திறன் அதிகரிக்கும். இதனால் மண்ணில் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும். வயலிலுள்ள களைகள் குறிப்பாக, கோரை போன்ற களைகள் கோடை உழவு செய்வதால் மண்ணின் மேற்பரப்புக்குக் கொண்டுவரப்பட்டு சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது முக்கிய தொழில்நுட்பமாகும். கோடை உழவு செய்வதால் நிலத்தடியில் உள்ள கூண்டுப் புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது. மிக முக்கியமாக மக்காச்சோளத்தைத் தாக்கும் அமெரிக்க படைப்புழுவினை கட்டுப்படுத்திட கோடை உழவு சிறந்தது. இதனால் வரும் பருவத்தில் பூச்சி நோய்த் தாக்குதல் பெருமளவு குறைகிறது. மண் அரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. கோடை உழவு செய்யாத நிலத்தில் நீா் வேகமாக வழிந்தோடி மண் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.