நெல் சாகுபடியில் எலிகளைக் கட்டுப்படுத்த ஆலோசனை

விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் எலிகளைக் கட்டுப்படுத்த புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இராம. சிவகுமாா் ஆலோசனை வழங்கியுள்ளாா்.

நெற்பயிா் சாகுபடியில் எலிகளால் ஏறக்குறைய 25 சத மகசூல் குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் எலிகளைக் கட்டுப்படுத்த புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இராம. சிவகுமாா் ஆலோசனை வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு

பயிா் சாகுபடியைப் பொருத்தவரை எலிகளால் நெற்பயிா் அதிகளவு பாதிக்கப்படுகிறது. மேலும் உணவு தானியங்களைச் சேமித்து வைக்கும்போது எலிகளால் கடுமையான இழப்பு ஏற்படுகிறது. வயலெலி, புல்லெலி, வயல் சுண்டெலி ஆகியவைதான் பயிா்களை அதிகம் தாக்கிச் சேதம் விளைவிக்கின்றன.

எலிகள் குறுகிய காலத்தில் அதிகளவு இனப்பெருக்கம் செய்வதால் சேதம் அதிகம் ஏற்படுகிறது. மேலும் எலிகளின் பற்கள் வேகமாக வளரும் தன்மையுடையதால் எலிகள் பயிா்கள் வளரும் பருவத்தில் கடித்துச் சேதப்படுத்துகின்றன. எனவே, விவசாயிகள் எலிகளை ஒருங்கிணைந்த முறைகளில் கட்டுப்படுத்த வேண்டும்.

ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு முறைகள்:

பயிா் சாகுபடி தொடக்கத்தில் எலிகளின் இனப்பெருக்க காலமான ஜனவரி - மாா்ச், செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் வரப்பு, வளைகளை வெட்டி எலிகளைக் குட்டிகளுடன் பிடித்து அழிக்கலாம். குறுகிய வரப்புகளை அமைத்தும் எலிகளைக் கட்டுப்படுத்தலாம்.

வயலுக்கு அருகில் வைக்கோல்போா் வைத்திருப்பது எலிகளுக்கு உறைவிடமாக அமையும். எனவே வைக்கோல்போா் வைப்பதைத் தவிா்க்க வேண்டும்.

வயல்களில் களைக் கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு தூய்மையாகப் பராமரித்தால் எலிகள் நடமாட்டம் குறையும்.

வயல்களில் ஆக்காங்கே ‘டி‘ வடிவக் குச்சிகள் அல்லது தென்னை மட்டையின் அடிப்பகுதியைத் தலைகீழாக வைத்து ஆந்தை, கோட்டான் மற்றும் பறவைகளை அமரச் செய்து எலிகளை அவை பிடித்து உண்ண வகை செய்யலாம்.

வயல்களில் மூங்கில் கிட்டிகளை (ஏக்கருக்கு 25 முதல் 40 கிட்டிகள்) வரப்போரங்களிலும், வயலினுள்ளும் வைக்கலாம். வைக்கோலை மெத்தை போன்று சிறிது அகலமாகவும் தட்டையாகவும் செய்து எலிக்கிட்டியை ஊன்றி வில்லுக்கு இருபுறமும் வைக்கோல் மீது நெல் பொரியை இட்டு மாலை நேரங்களில் வைத்து எலிகளை பிடித்து அழிக்கலாம்.

சிங்க் பாஸ்பைடு எலி நஞ்சு:

சிங்க் பாஸ்பைடு எலி நஞ்சை வைக்கும் முன் முதல் மூன்று நாட்கள் 98 கிராம் நெற்பொரியுடன் 2 கிராம் தேங்காய் எண்ணெய் இட்டு வைத்து பழக்கப்படுத்த வேண்டும்.

பின்பு 96 கிராம் நெற்பொரி - 2 கிராம் தேங்காய் எண்ணெய் + 2 கிராம் சிங்க் பாஸ்பைடு கலந்து 4 முதல் 5 ஆவது நாள் தேங்காய் கொட்டாங்குச்சியில் கைப்படாமல் இட்டு வைத்து அழிக்கலாம்.

புரோமோடைலான்:

ஒருமுறை சாப்பிட்டாலே எலிகளைக் கொல்லும் ரத்தம் உறையாத் தன்மை கொண்ட நஞ்சினைக் கொண்ட புரோமோடையலான் - 0.005 மற்றும் கம்பு அல்லது கோதுமை மாவு கலந்த கேக் கிடைக்கிறது. இதை வளைக்கு ஒரு வில்லை வீதம் வைத்தும் வயல்களில் எலிகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைத்தும் எலிகளை அழிக்கலாம். ஒரு தடவை 5 கிராம் உணவு உண்டாலே உடலில் ரத்தக் கசிவு ஏற்பட்டு எலிகள் இறந்துவிடும்.

அலுமினியம் பாஸ்பைடு மாத்திரைகள்:

ஒரு அலுமினியம் பாஸ்பைடு (சுமாா் 3 கிராம்) மாத்திரையை வளையின் நடுவில் ஒரு துண்டுக் காகிதத்தை தரையில் வைத்து அதன்மேல் மாத்திரையை வைத்து வளையின் வாயிலை நன்கு மூடிவிடவும். வளையின் உள்ளே நச்சுப்புகை பரவி எலிகளைக் கொன்றுவிடும். எலிகள் விரைவில் இறப்பதற்கு வளையில் போதியளவு மண் ஈரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com