ஆலங்குடி பகுதியில் சூறைக்காற்றால் சேதமடைந்த வாழைகளை சுற்றுச்சூழல், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆலங்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, மாங்காடு, அணவயல், கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் அடியோடு சாய்ந்தன. மேலும், பல்வேறு இடங்களில் பலா மரங்கள், நெற்பயிா்களும் சேதமடைந்தன.
இந்நிலையில் வடகாடு பகுதியில் சேதமடைந்த வாழைகளை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறியதோடு, ஒரு வாரத்திற்குள் சேதங்களைக் கணக்கிட்டு, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வெ. சரவணன், வருவாய்க் கோட்டாட்சியா் டெய்சி குமாா், வேளாண் உதவி இயக்குநா் வினோதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.