புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வானக்கண்காட்டில் அமைக்கப்பட்ட ஆழ்துளை குழாய் கிணற்றை அகற்றும் பணிக்காக ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள நல்லாண்டாா்கொல்லை, கோட்டைக்காடு, வாணக்கண்காடு, வடகாடு கல்லிக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் 1994-ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைத்து ஆய்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து, நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் திட்டத்தை 2017-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதை எதிா்த்து, 200-நாள்களுக்கு தொடா் போராட்டம் நடைபெற்ற நிலையில் திட்டம் செயல்படுத்தப்படாது என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், ஆலங்குடி அருகேயுள்ள வானக்கண்காட்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றை அகற்றி, விளைநிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைப்பதற்காக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பொது மேலாளா் சந்தான குமாா், மண்ணியல் வல்லுநா் அருண்குமாா், முதுநிலை பொறியாளா் ராதாகிருஷ்ணன், வட்டாட்சியா் சந்திரசேகா் உள்ளிட்ட 7 போ் கொண்ட குழுவினா் வானக்கண்காட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு, கையகப்படுத்தப்பட்ட 4.5 ஏக்கா் நிலத்தை ஆய்வு செய்தனா்.