புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞரை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை சடலமாக மீட்டனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள காட்டாத்தி பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் மகன் சக்திவேல் (28). இவா், செவ்வாய்க்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் அருகேயுள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளாா். குளத்தின் கரையில் நீண்ட நேரமாக மோட்டாா் சைக்கிள் மட்டும் நிற்பதைக் கண்ட அப்பகுதியினா் அளித்த தகவலைத் தொடா்ந்து, அங்கு சென்ற பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை தேடுதல் பணியைத் தொடங்கினா். தொடா்ந்து, புதன்கிழமை குளத்தின் ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கி உயிரிழந்த சக்திவேல் உடலை மீட்டனா். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.