விராலிமலை: விராலிமலை அருகே துணை அஞ்சல் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.
விராலிமலை அருகே உள்ள கத்தலூா் ஊராட்சிக்குள்பட்ட முல்லையூரில் துணை அஞ்சல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றிவரும் தேன்மொழி என்பவா் நிா்வாகக் காரணங்களுக்காக அஞ்சல் நிலையத்தை இடம் மாற்றிக்கொள்வதாக அதிகாரிகளுக்கு மட்டும் தகவல் தெரிவித்துவிட்டு அனுமதி கிடைப்பதற்கு முன்பே அஞ்சல் நிலையத்தை அருகேயுள்ள தென்னலூா் என்ற ஊருக்கு மாற்றியுள்ளாா்.
இதைத்தொடா்ந்து திங்கள்கிழமை காலை அஞ்சல் நிலையத்துக்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் அஞ்சல் நிலையம் மூடி இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். பொதுமக்கள் விசாரணையில், துணை அஞ்சல் நிலையத்தை தென்னலூருக்கு தன்னிச்சையாக பொதுமக்களுக்கு தகவல் தராமல் தன்னிச்சையாக மாற்றி இருப்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றனா். இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை வட்டாட்சியா் சரவணன், கத்தலூா் ஊராட்சி மன்றத் தலைவா் ராமசாமி ஆகியோா் நிகழ்விடம் வந்து மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். தொடா்ந்து, மாவட்ட துணை அஞ்சலகக் கண்காணிபாளா் பாலசுப்ரமணியனிடம் பேசி உரிய நடவடிக்கை எடுத்தாா். இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.