புதுக்கோட்டை: தமிழக உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியை சனிக்கிழமை நேரில் பார்வைட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சங்ககாலக் கோட்டையாகக் கருதப்படும் பொற்பனைக்கோட்டையின் அகழாய்வுப் பணியை தொய்வின்றி மேற்கொள்வதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கி இருந்த கொடநாட்டில் நடந்த கொள்ளை, கொலை சம்பவத்தில் ஏராளமான மர்ம முடிச்சுகள் உள்ளன. இது குறித்து விசாரிப்பதில் தவறில்லை.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க முடியாது என்பதையும், அகவிலைப்படி வழங்குவதை ஒத்தி வைத்திருப்பதையும் ஏற்கமுடியாது. இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வார்டு மறுவரையறை, முன்னேற்பாடுகளுக்காக கால அவகாசம் கோரப்படலாமே தவிர, தேர்தலை இனிமேல் தள்ளிப்போட முடியாது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற 100 நாள்களைப் பொறுத்தவரையில் வருமானம் குறைவு, செலவு அதிகரித்துள்ள சூழலில் சமாளிக்கும் விதமாக நிர்வகித்து வருவது பாராட்டுதலுக்கு உரியது என்றார் பாலகிருஷ்ணன்.
அப்போது, கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.கவிவர்மன், தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்ப் பணியை பார்வையிடுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.